நிம்பஸ் என்ற புதிய கோவிட் மாறுபாடு அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
‘நிம்பஸ்’ என்ற புதிய கோவிட் மாறுபாடு, அறிவியல் ரீதியாக NB.1.8.1 என அழைக்கப்படுகிறது. இது ஆசியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா முழுவதும் கொரோனா பாதிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஓமிக்ரான் வகையின் துணை மாறுபாடு ஆகும்.
இந்த மாறுபாடு தனித்துவமான மற்றும் மிகவும் வேதனையான தொண்டை புண் போன்ற அறிகுறிகளால் கவனத்தை ஈர்த்து வருகிறது. தொண்டையை பிளேடால் அறுப்பது போன்ற வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தரவுகளின்படி, ஜூன் 7 ஆம் தேதி நிலவரப்படி இரண்டு வாரங்களுக்குள் நிம்பஸ் அமெரிக்காவில் தோராயமாக 37% பாதிப்புகளுக்கு காரணமாக இருந்தது.
உலகம் முழுவதும் நிம்பஸ் பாதிப்பு
நிம்பஸ் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு புதிய பாதிப்புகளுக்கு பங்களித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கலிபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட குறைந்தது 13 அமெரிக்க மாகாணங்களில் NB.1.8.1 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாறுபாடு இங்கிலாந்திலும் பதிவாகியுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 947 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது.
NB.1.8.1 சீனாவிலும் பதிவாகி உள்ளது. சீனாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பைத் தூண்டியுள்ளது என்பதையும் CDC உறுதிப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகளிலும் தொற்றுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
NB.1.8.1 இன் பிற அறிகுறிகள்
கடுமையான தொண்டை வலியை தவிர, பாதிக்கப்பட்ட நபர்கள் மூக்கடைப்பு, சோர்வு, லேசான இருமல், காய்ச்சல், சுவை மற்றும் வாசனை இழப்பு, மூக்கு ஒழுகுதல், பசியின்மை மற்றும் தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் ஆகியவையும் ஏற்படுகிறது..
புதிய மாறுபாடு எந்த தனித்துவமான பண்புகளையும் கொண்டிருக்கவில்லை. அறிகுறிகள் பொதுவாக லேசானது முதல் மிதமானதாகவே உள்ளது.. இருப்பினும், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
NB.1.8.1 தற்போது உலக சுகாதார அமைப்பால் (WHO) கண்காணிக்கப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. NB.1.8.1 என்பது ஒமிக்ரான் குடும்பத்தின் வழித்தோன்றல். நிபுணர்களின் கூற்றுப்படி, NB.1.8.1 துணை மாறுபாடு கடுமையான நோயை ஏற்படுத்தாது. இருப்பினும், இது மிகவும் பரவக்கூடியதாகத் தெரிகிறது.
இந்தியாவில் கோவிட் பாதிப்பு
வளர்ந்து வரும் ஒமிக்ரான் துணை மாறுபாடுகளான LF.7, XFG, JN.1 மற்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன. எனினும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் குறைந்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6000-க்கும் கீழ் குறைந்துள்ளது.