தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட போராடி வருகிறார்.
தற்போதைய அரசியல் சூழலில், அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கைகோர்த்து சுமார் 15 முதல் 20 தொகுதிகள் வரை பெறும் நிலையை எட்டியுள்ளார். ஆனால், ராமதாஸின் புதிய கட்சிக்கு திமுக, அதிமுக அல்லது தமிழக வெற்றி கழகம் என எந்தப் பெரிய சக்திகளும் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. அதிமுக பக்கம் போனால் மகனுடனும், திமுக பக்கம் போனால் விசிக-வுடனும் மோதல் ஏற்படும் என்பதால், ராமதாஸ் தரப்பு பெரும் தர்மசங்கடத்தில் உள்ளது.
தன்னைத் தேடி வந்த கட்சிகள் மாறி, தற்போது கூட்டணிக்காகத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ராமதாஸ், தனது ஆதரவாளர் அருள் மூலம் திமுக மற்றும் அதிமுக தலைமைகளிடம் தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது. வன்னியர் வாக்கு வங்கியின் திசை, இந்த தந்தை – மகன் மோதலில் எங்கு சாயும் என்பதே இப்போதைய கேள்வி.



