காதலித்தவனையே கரம் பிடிப்பது எல்லாம் வரம் தான். ஆனால், அப்படி காதலித்து, வேறு வழியில்லாமல் திருமணம் வரை வந்த காதலன், திருமணம் முடிந்த கையோடு எஸ்கேப் ஆக நினைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனின் சுயரூபம் தெரிந்திருக்குமோ என்னமோ? காதலி 20 கி.மீ. வரை விடாது துரத்தி, தப்பி ஓட முயன்ற காதலனைப் பிடித்து, மண்டபத்திற்கு இழுத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியுள்ளது. வயது கோளாறில் காதலித்து இருப்பான் போல.. கடைசியில் காதல்.. கல்யாணம் முடியும் என்று நினைத்திருக்க மாட்டான். ஆனால், கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்த இளம்பெண், தனது காதல் குறித்து வீட்டில் தைரியமாக பேசியிருக்கிறாள். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு இரு வீட்டாரும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சம்மதித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூதேஸ்வர் நாத் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக பத்திரிகை அடித்து, ஊரெல்லாம் கொடுத்தாயிற்று, சொந்த பந்தங்கள் அனைவரும் கோயிலில் நிரம்பியிருந்தனர். ஆனால், திருமண நாளன்று வெகு நேரமாகியும் மணமகன் வரவில்லை. திருமண நேரம் நெருங்க நெருங்க, எல்லோரும் மணப்பெண்ணைக் கேள்வி கேட்க துவங்கினார்கள். காதலனுக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்ட காதலி இதுகுறித்து கேட்க, மணமகன் சாக்குப்போக்கு கூறி, தான் கிளம்பிக் கொண்டிருப்பதாக கூறியது காதலியை அதிர்ச்சியடைய செய்தது.
கல்யாணத்துக்கு முகூர்த்த நேரம் குறித்த பின், முகூர்த்த நேரத்தில் வீட்டில் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என காதலன் கூறியதால், சந்தேகமடைந்த மணப்பெண் சற்றும் தாமதிக்காமல் அவசர அவசரமாக மணமேடையில் இருந்து பேருந்து நிலையத்துக்கு ஓடத் துவங்கினார். தான் திருமணம் செய்து கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கோவிலில் இருந்து ஏறக்குறைய சுமார் 20 கி.மீ. தூரம் இப்படி எந்த வாகன வசதியும் இல்லாத இடத்தில் ஓடிச் சென்று பீமோரா காவல் நிலையம் அருகே பேருந்து நிலையத்தில், ஊரை விட்டு ஓடிச் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த தனது காதலனைக் கண்டுபிடித்தார்.
அதன் பிறகு பேருந்து நிலையம் ரணகளமானது. காதலனின் முகமெல்லாம் வீங்கி சரியான அடி, உதை. நடுரோட்டில் அடித்து, காதலனை தரதரவென இழுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருக்கிறார். பின்னர் பிமோரா கோவிலில் திருமணம் நடைபெற்றது. பலரும் மணப்பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.