இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக உடல் பருமன் பார்க்கப்படுகிறது. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற எடை குறைப்பு முறைகளுக்கு மத்தியில், சாமானியர்களுக்கும் சாத்தியமான ஒரு எளிய மந்திரமாக நடைப்பயிற்சி திகழ்கிறது. எந்தவித இயந்திரங்களும் தேவையின்றி, எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்தப் பயிற்சி, உடல் ஆரோக்கியத்தில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.
ஒருவர் தனது உடல் எடையில் ஒரு கிலோவை குறைக்க வேண்டுமெனில், சராசரியாக 3,500 கலோரிகளை எரிக்க வேண்டும். ஆய்வுகளின்படி, ஒரு மைல் தூரம் (சுமார் 2,000 அடிகள்) நடப்பதன் மூலம் 100 கலோரிகளை எரிக்க முடியும். நிபுணர்களின் கருத்துப்படி, வாரத்திற்கு 1 முதல் 1.5 கிலோ வரை எடையை குறைப்பதே ஆரோக்கியமானது. எனவே, ஒரே நாளில் அதிகப்படியான இலக்குகளை நிர்ணயிக்காமல், நாளொன்றுக்கு 10,000 அடிகள் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதே சிறந்தது.
நடைமுறையில் சாத்தியமாக்குவது எப்படி..?
ஆரம்பத்திலேயே 10,000 அடிகளை எட்ட முயற்சிப்பதை விட, 2,000 அடிகளில் தொடங்கிப் படிப்படியாக உயர்த்துவது உடல் நலத்திற்கு நல்லது. லிஃப்ட்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி நடப்பது, இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் உலா வருவது போன்ற எளிய மாற்றங்கள் மூலமே அன்றாட இலக்கை எட்டிவிடலாம். காலையா அல்லது மாலையா என்பதை விட, தினமும் செய்கிறோமா என்பதே எடை குறைப்பில் மிக முக்கியமானது.
உணவு முறையும் உடற்பயிற்சியும் :
நடைப்பயிற்சியோடு மட்டும் நிறுத்திவிடாமல், கலோரி குறைப்பு உணவு முறையை பின்பற்றுவது விரைவான மாற்றத்தைக் கொடுக்கும். நாளொன்றுக்கு 500 கலோரிகள் வரை உணவில் குறைத்துக் கொள்வதுடன், எளிய ஸ்ட்ரெட்ச் மற்றும் வலிமைப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வது தசை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இருப்பினும், ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாக உணவு முறையை மாற்றக் கூடாது என்பது கவனிக்கத்தக்கது.



