மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வாரியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தின செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர், ஒரு மின் இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஆன்லைன், 2811 பிரிவு அலுவலகங்களின் சிறப்பு முகாம்கள் மற்றும் mobile campகள் போன்றவைகளை நடைமுறைப்படுத்தி ஆதார் என்னை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது, மேலும் கூடுதலாக குடிசைகளை பொறுத்தவரை மின் நுகர்வோர்களின் வீடு வாரியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மின் இணைப்போடு ஆதாரை இணைத்த அனைத்து மின் நுகர்வோர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்தார். மேலும் மிக சிறப்பாக பணியாற்றிய மின் வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.