தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அந்த வகையில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்..
அந்த வகையில் வரும் 18-ம் தேதி விஜய் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.. இதை முன்னிட்டு தவெகவினருக்கு அக்கட்சி தலைமை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் “ வரும் 18ஆம் தேதி (18.12.2025, வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நம் வெற்றித் தலைவர் அவர்கள். தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள். உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ. நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
எளிதில் அடையாளம் காணும் வகையில், தன்னார்வலர்கள் சீருடை அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி. தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிற சாலைகளிலும் நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ. கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள். காம்பவுண்ட் சுவர்கள். மரங்கள். வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்). கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள். தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : “இது விபத்து இல்ல, திமுக அரசால் நடந்த கொலை; இனியும் இதை செய்யாமல் இருப்பது வெட்கக்கேடு..” அண்ணாமலை காட்டம்!



