தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலை உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் டிட்வா புயல் தொடர்பாக தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களுடன் அலோசனை நடைபெற்றது.. ராமநாதபுரத்தில் இருந்து கடலோரமாக இந்த புயல் நகர்ண்டு வருகிறது.. சென்னை ஓரமாகவே புயல் கடந்து செல்லும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுக்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் என 30 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.. இந்த புயலை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.. போக்குவரத்து எங்குமே தடைபடவில்லை.. டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ இல்லை.. இன்றும் நாளையும் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம்.. செல்ஃபி எடுப்பவர்கள் கடற்கரையோரங்களுக்கு போகாமல் இருப்பது நல்லது..
முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கண்காணித்து வருகிறார்.. இந்த புயலை சாமர்த்தியமாக இந்த அரசு சமாளிக்கும்.. மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் உதவியை கோரவும் அறிவுறுத்தி உள்ளோம். 1 கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.. யாரும் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.. அதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்..” என்று தெரிவித்தார்.



