பாமகவின் அதிகாரப்பூர்வ முகவரி தைலாபுரம் தோட்டம் என்று இருந்து வந்த நிலையில், தற்போது அலுவலகத்தின் முகவரியை அன்புமணி ராமதாஸ் அதிரடியாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்னுடைய தவறு. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை. பாமக-வில் முகுந்தனை நியமித்தபோது, தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார். பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தனக்கு ஆதரவு தரும் நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாமக பொருளாளர் பொறுப்பில் இருந்து ராமதாஸால் நீக்கப்பட்ட திலகபாமாவை ”நீங்கள் தான் பாமகவின் பொருளாளர்” என்று அன்புமணி அறிவித்தார். மேலும், அப்போது பேசிய அவர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் தான் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முடியும்.
ஆகையால், இனி யார் நீக்கப்பட்டாலும் கவலைப்பட வேண்டாம். அடுத்த நிமிடமே நியமனக் கடிதம் அனுப்புவேன். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எனது கடிதம் மட்டுமே செல்லும். வரும் சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். நம்முடைய ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். இதை செயல்படுத்த என்னிடம் பல திட்டங்கள் உள்ளன” என்று பேசினார்.
இந்த சூழலில் தான், பாமக அலுவலகத்தின் முகவரியை அன்புமணி ராமதாஸ் அதிரடியாக மாற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தியாகராய நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக மாற்றி அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுநாள் வரை பாமகவின் அதிகாரப்பூர்வ முகவரி தைலாபுரம் தோட்டம் என்று இருந்து வந்த நிலையில், தற்போது அலுவலகத்தின் முகவரியை அன்புமணி ராமதாஸ் அதிரடியாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.