சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவ பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை இப்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் மருந்துக்கும் கூட அப்போது கிடையாது.
கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரியும் நாட்டுக்கோழிகளின் இறைச்சிக்கு சுவை அதிகம். ஆனாலும், விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறார்கள்.
பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோழிக்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும், போன்லெஸ் சிக்கன் உள்ளிட்ட வகைகள் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கோழி இறைச்சி ரூ.250-க்கு விற்பனையான நிலையில், ஒரே நாளில் ரூ.60 முதல் ரூ.90 வரை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.