அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் அதிகம் தேடப்பட்டு வ்ந்த குற்றவாளிகளில் ஒருவரான கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (NIA) புதன்கிழமை கைது செய்துள்ளது. அதிகாரிகள் அன்மோல் பிஷ்னோயை இன்று புது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர்.
மும்பை போலீஸ் இரண்டு முறை அனுப்பிய நாடு கடத்தல் கோரிக்கைகளின் அடிப்படையில், அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (அங்குள்ள நேரம்) அன்மோலை நாடுகடத்தி இந்தியாவுக்கு அனுப்பியது. அன்மோல், தற்போது சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி ஆவார்.. அவர் லாரன்ஸ் பிஷ்னோயின் சர்வதேச குற்ற வலையமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக கருதப்படுகிறார்.
அன்மோல் பிஷ்னோய், கடந்த ஆண்டில் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவரான பாபா சித்திக்கி கொலைக்கேஸில் முக்கிய குற்றச்சாட்டுக்குரியவர். அவர் மீது குறைந்தது 18 குற்ற வழக்குகள் உள்ளன.
2023 ஏப்ரலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இல்லம் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.. 2022இல் பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கிலும் அவர் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
பஞ்சாபின் ஃபசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த அன்மோல், NIA-வின் ‘மோஸ்ட் வாண்டெட்’ பட்டியலில் இருந்தார். அவரை பிடிக்க ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். முதலில் நேபாளுக்கு சென்ற அவர், அங்கிருந்து துபாய், கென்யா வழியாக இறுதியில் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடுகடத்தல் செயல்முறைகள் தொடங்கப்பட்டன. அந்த செயல்முறைகள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்து, அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் “2022 முதல் தப்பிச் சென்ற அமெரிக்காவில் வசித்த அன்மோல் பிஷ்ணோய், அவரது சிறையில் உள்ள சகோதரர் லாரன்ஸ் பிஷ்ணோய் தலைமையிலான பயங்கரவாத கும்பலில் சம்பந்தப்பட்டதாக இதுவரை கைது செய்யப்பட்ட 19வது குற்றவாளி. 2020 முதல் 2023 வரை நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத செயல்களில், நியமிக்கப்பட்ட தனிநபர் பயங்கரவாதி கோல்டி ப்ரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்ணோயி ஆகியோருக்கு அவர் செயல்பாட்டில் உதவியிருந்தது விசாரணையில் உறுதியானதால், 2023 மார்சில் NIA அவருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பாபா சித்திக் படுகொலை வழக்கில் அன்மோல் பிஷ்ணோயின் தொடர்பு
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் மற்றும் NCP தலைவர் பாபா சித்திக்,
2024 அக்டோபர் 12 அன்று, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது மகன் ஜீஷான் அலுவலகம் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் லாரன்ஸ் பிஷ்ணோய் காங்குடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படுகொலை வழக்கில், மும்பை போலீஸ் மகாராஷ்டிரா கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் (MCOCA) எனப்படும் கடுமையான சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தியுள்ளது.இந்த வழக்கில் அன்மோல் பிஷ்ணோய், ஷுபம் லொன்கார் மற்றும் ஜீஷான் முகம்மது அக்தர் ஆகியோரைக் கோரப்பட்ட குற்றவாளிகளாக (wanted accused) பெயரிட்டு அறிவிக்கப்பட்டது.



