தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள், இனி கட்டாயம் உணவுப் பாதுகாப்புத் துறை விதிகளின்படி உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் பானிபூரி, சமோசா, ரவா லட்டு, சிப்ஸ், போண்டா, சூப், வறுத்த மீன் மற்றும் இறைச்சி வகைகள், சிக்கன் பக்கோடா போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் இந்த உரிமத்தைப் பெற வேண்டும்.
இந்த உரிமத்தைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்றும், உரிமையாளர்கள் இதனை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் இந்த உரிமத்தைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் எளிமையான வழிமுறையை வழங்கியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை விதித்த இந்த உரிமத்தை வைத்திருக்காத கடைகள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. விதிமுறைகளை மீறும் தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதன்பின்னர் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
Read More : மதிய உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? ஆபத்து வரப்போகுது..!! இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!



