தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. பொதுவாகவே தேர்தல் நெருங்கும் வேளையில் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வரும் நகர்வுகள் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை :
பெண்களின் வாக்குகளைக் கவர்வதில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் ‘குலவிளக்கு’ திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, சமீபத்தில் சுமார் 1.25 கோடி பெண்களுக்கு கோடைக்கால சிறப்புத் தொகையை முன்கூட்டியே வழங்கி, இல்லத்தரசிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது தமிழக அரசு.
அரசு ஊழியர்களின் பென்ஷன் கனவு நனவாகுமா..?
பல ஆண்டுகளாகப் போராட்டக் களத்தில் இருந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு ‘தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) மூலம் ஒரு தீர்வை முன்வைத்துள்ளார் ஸ்டாலின். ஓய்வு பெறும்போது கடைசிச் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக உறுதி செய்யும் இந்த திட்டம், அரசுக்கு 13,000 கோடி ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தினாலும், அரசு ஊழியர்களின் வாக்குகளை தக்கவைக்க எடுக்கப்பட்ட ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே இது பார்க்கப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிலவிய குழப்பங்களுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதாந்திர மின் கட்டணம் :
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது ‘மாதாந்திர மின் கட்டண முறை’. இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படுவதால் ஸ்லாப் உயர்ந்து அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் புகார் கூறி வந்தனர். இதற்குத் தீர்வாக, மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திரக் கணக்கீடு முறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதன் மூலம் மின்சார கட்டண சுமை கணிசமாகக் குறையும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாரியத்தில் அதிரடி மாற்றங்கள் :
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் வெறும் 3 நாட்களில் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மீட்டர் தட்டுப்பாட்டைப் போக்க மக்களே மீட்டர்களை வாங்கிக் கொள்ள அனுமதித்தது மற்றும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட மேம்பாட்டுக் கட்டணத்தை மீண்டும் பொதுமக்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிட்டது. இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, இந்த மாதாந்திர மின் கட்டண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுவிட அரசு தீவிரம் காட்டி வருகிறது.



