வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் புதுப்பிப்பு செய்யப்படும் வகையில் புதிய ‘ECINET’செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இத்தகவல்கள் வழங்க இந்த அமைப்பு உதவுவதோடு, இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது அமலுக்கு வர உள்ளது.
முன்னர் பயன்படுத்தப்பட்ட கைமுறை அறிக்கையிடல் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய செயல்முறை நேர தாமதத்தை கணிசமாகக் குறைக்கும். இந்த முயற்சி, பொதுமக்களுக்கு தகவலை நேரத்துக்கேற்ப வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மிக துல்லியமாக வாக்குப்பதிவு சதவீதத்தை அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் வி.டி.ஆர்.எனப்படும் செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தினத்தன்று ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை இந்த செயலியில் வாக்குப்பதிவு விவரம் துல்லியமாக பதிவேற்றம் செய்யப்படும். இணையதள வசதி இல்லாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலரிடம் இருந்து உடனடியாக இந்த விவரங்களை பெற்று செயலியில் விரைந்து பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பீகார் தேர்தலுக்கு முன்பு இந்த வசதி செயலியில் கொண்டுவரப்படும்.
இதற்கு முன்பு தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு சதவீதம் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதாவது 1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தும் விதிகளில் உள்ள விதி 49S என்ற சட்ட விதிமுறை அடிப்படையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குச்சாவடியில் இருக்கும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு முகவர்களுக்கு, பதிவான வாக்குகளின் கணக்குகளை விளக்கும் Form 17C-ஐ தலைமை அலுவலர்கள் வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் நேரடியாக, வி.டி.ஆர். செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவித காலதாமதமும் இல்லாமல் வாக்குப்பதிவு சதவீதத்தை அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் அறிந்து கொள்ள முடியும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.