தெலாங்கானாவில் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24×7 செயல்படலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது..
தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடைகள் மற்றும் நிறுவனச் சட்டம் 1988ஐ அரசு திருத்தியதால், இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது 24×7 செயல்பட முடியும். தெலங்கானாவின், கடைகள் ஸ்தாபன சட்டம் 1988 இன் பிரிவு 7 ல் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களை 24×7 செயல்பட அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது… அதாவது வாரத்தின் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரம் கடைகள் திறந்திருக்கலாம்..
இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு வழங்கி உள்ளது. எனினும் இந்த புதிய திட்டத்தைப் பெறுவதற்கு வணிக நிறுவனங்கள் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
வணிக நிறுவனங்களுக்கு தெலங்கானா அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்
- அடையாள அட்டைகளை வழங்குதல்
- வாராந்திர விடுமுறை வழங்குதல்
- வாராந்திர வேலை நேரத்தை கடைபிடித்தல்
- கூடுதல் நேர ஊதியம்
- அறிவிக்கப்பட்ட தேசிய/பண்டிகை விடுமுறை நாட்களில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய இழப்பீட்டு விடுமுறைகளை வழங்குதல்
- பெண் ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும்
- இரவு ஷிப்ட்களில் பணிபுரிய அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும்
- பெண் ஊழியர்களுக்கு இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும்..