சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா கார், அரசின் மினி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் வரை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சேவையை லெக்கோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. ஆலந்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மதுரவாயல் என மொத்தம் 28 இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் முழுவதும் பயணிப்போருக்கு 20% கட்டண சலுகையும், கூகுள் பே, போன்பே மூலம் செலுத்துவோருக்கு 10% சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் மதுரவாயல் பைபாஸில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.