மனிதர்களை போல் இங்கிலாந்தில் நாய் ஒன்று குடிக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர சிகிச்சை எடுத்துவருகிறது.
மனிதர்கள் குடிக்கு அடிமையானால்தான் அட குடிகார நாயே என்று மற்றவர்கள் கேலி செய்வார்கள். ஆனால் இங்கிலாந்தில் நாய் ஒன்று குடிக்கு அடிமையாகி சிகிச்சை பெற்றுவருவது இதுவே முதல்முறை. இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் மதுபோதைக்கு அடிமையானது. அதாவது தினமும் உறங்க செல்வதற்கு முன் அதன் உரிமையாளர் மது அருந்திவிட்டு மீதியை, நாய்க்கு மிச்சம் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இது இப்படியே வாடிக்கையானதால் கோகோ சில மனிதர்களை போல் குடிக்கு அடிமையானது. இதையடுத்து உரிமையாளர் மரணமடைந்ததையடுத்து பிளைமவுத், டெவோனில் உள்ள உட்சைட் அனிமல் ரெஸ்க்யூ டிரஸ்டிடம் கோகோ ஒப்படைக்கப்பட்டது.
கோகோவை போல் மற்றொரு நாயும் மதுவிற்கு அடிமையானது கால்நடை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாய்களுக்கு அறக்கட்டளையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு நாய் சிகிச்சை பலனளிக்காமல் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. இதேபோல் வலிப்பு ஏற்பட்ட கோகோவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கு நான்கு வாரங்கள் அதற்கு தூக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: கோகோ தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 24 மணிநேரமும் கவனிப்பு தேவைப்பட்டது. மது அருந்தி அடிமையானதால் ஏற்பட்ட உடல் நல குறைவினால், பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. மது பழக்கத்தில் இருந்து விடுபட உதவவும், மேலும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் கோகோவுக்கு நான்கு வாரங்கள் தூக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.சிகிச்சைக்கு பின் இப்போது ஒரு சாதாரண நாயைப் போல நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னும் சிறிது கவனிப்பு தேவை. உடல் ரீதியாக அவர் குணமடைந்துவிட்டதாகத் தோன்றினாலும், மனதளவில் அந்த நாய் சில சமயங்களில் மிகவும் கவலையுடன் சோர்வாக இருக்கிறது என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.