நீண்ட ஆயுள், அகால மரணம் என இரண்டுக்குமே காரணமானவர் சனிபகவான் தான். சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ இருந்தால் அவர் அனைத்து விதமான செளபாக்கியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார். “சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?” என சொல்வார்கள். அது போல சனி பகவான் எந்த அளவிற்கு துன்பத்தை கொடுக்கக் கூடியவரோ, அதே அளவிற்கு நற்பலன்களையும் வாரி வழங்கக் கூடியவர்.
வாழ்க்கையில் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுத்து, பல வாழ்க்கை பாடங்களை அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொடுத்து, வாழ்க்கையை சரியான பாதையில் சீராக கொண்டு செல்லக் கூடியவர் சனி பகவான். இவரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. சனியின் கெடு பார்வையில் இருந்து தப்பித்து, நல்ல பலன்களை பெறுவதற்கும், கஷ்டங்கள் பலவும் தீருவதற்கு சனிக்கிழமையில் சனி பகவானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சனிக்கிழமையில் உபவாசமாக இருந்து, கெடு பலன்களை விலக்க வேண்டும் என சனி பகவானிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். மாலையில் சாத்வீக உணவை சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். ஏதாவது இனிப்பு அல்லது இனிப்பான தயிர் சேர்த்து விரதத்தை நிறைவு செய்யலாம். அரச மரத்தடியில் கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கருப்பு எள், கருப்பு உளுந்து, வெல்லம் ஆகியவற்றை கருப்பு துணியில் சுற்றி, அவற்றை அரச மரத்தடியில் வைத்து, சனி பகவானின் அருளை வேண்டி வழிபட வேண்டும். பிறகு இந்த பொருட்களை சனியின் கெடு பார்வையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கஷ்டப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். பிறகு சனி பகவான் கோவிலுக்கு சென்று கடுகு எண்ணெய்யில் சனி பகவான் சன்னதி முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஆனால் சனி பகவானுக்கு நேராக நின்று வழிபடக் கூடாது.
சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றி வழிபடுவதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் கூடுதல் பலன்களை வழங்கும். அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்! சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம் காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தந்தருள்வார் சனீஸ்வரர்!
Readmore: கும்பகோணத்தில் எந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?