வரும் 12-ம் தேதி தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்..
இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக – ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக சனாதனத்துக்கும் வர்ணாசிரமதர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர். அதிலும் குறிப்பாக 42 உயிர்களைப் பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு இன்னமும் அனுமதி தராமல் இருக்கிறார். ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாகச் சந்தித்தது பொதுவெளியில் பரவி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார் ஆளுநர்.
‘ஏன் இது போன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டபோது அரசுக்கு உரிய எழுத்து மூலம் பதிலைத் தராத ஆளுநர் அவர்கள், மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப் பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் ஆளுநர். ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்ட ஆளுநர், தனது பிரமாண உறுதிமொழியை மீறி இப்படிப் பேசி இருப்பது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. சாதாரண ரவியாக இருந்தால், இதுபோன்ற அபத்தக் குரல்கள் பொருட்படுத்தத்தக்கது அல்ல. ஆளுநராக இருப்பதால் தான் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது.
அதே கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவதூறு கருத்தைச் சொல்லி இருக்கிறார் ஆளுநர். கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆகிய போராட்டங்கள் அந்நிய நாடுகளின் நிதியால் நடந்த போராட்டம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவது ஆகும்.
இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்த மக்கள் போராட்டங்கள் இவை. இது அனைத்தையும் அந்நியச் சதி என்று திசை திருப்புவதன் உள்நோக்கம் என்ன? 13 உயிர்கள் துள்ளத் துடிக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த மக்களும் அந்நியச் சதிகாரர்கள் என்கிறாரா ஆளுநர்? கூட்டத்தைக் கலைப்பதற்காக மட்டுமில்லாமல், துரத்தித் துரத்திச் சுட்டது அதிமுக ஆட்சி. இதை எல்லாம் நியாயப்படுத்துகிறாரா ஆளுநர்? ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் – ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் – அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு ஆகும்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வரும் 12.4.2023 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..