தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் “சொந்த வீடு” என்ற கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்ட, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்ட முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மெகா திட்டத்திற்காக அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே, பயனாளிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் மிகப்பெரிய நிதி உதவிதான். தகுதியுள்ள ஒவ்வொரு ஏழை தொழிலாளிக்கும் தலா 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் வசிக்கும் பழைய குடிசை வீடுகள் நவீன கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஒட்டுமொத்த 8 லட்சம் குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு, தரமான கான்கிரீட் கூரைகளை கொண்ட வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட கால இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒரு லட்சம் வீடுகளுக்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட உள்ளன. நிலமற்ற ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பாதுகாப்பு உணர்வை தந்துள்ளது.



