கடலூரில் தவறான சிகிச்சையால் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கை விரல்கள் அழுகியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியை சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதமம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பண்ருட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரின் வலது கையில் துளை கருவி பயன்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் அளிக்கக்கூடிய பொதுவான மற்றும் சாதாரண சிகிச்சை முறைதான். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தார்.
சில நாட்களில் அவருக்கு விரல்கள் அழுகியது. இதனால் அதிர்ச்சியடைந்து மீண்டும் மருத்துவர்களை சந்தித்து கேட்டுள்ளார். இதைப் பார்த்து மருத்துவர்கள் தானாக சரி ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர். எனினும் குப்பு மற்றும் உறவினர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஜிப்மர் மருத்தவமனையில் பரிசோதனைக்கு சென்றிருந்தனர். அப்போது கையில் குத்தப்பட்ட துளை கருவியால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியாகினர்.
தற்காலிகமாக அவரது கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மருந்து மாத்திரைகளில் குணப்படுத்த முடிந்தால் கை குணமாகிவிடும் எனினும் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் நிலையைய் போன்று மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.