தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல் பேசியது சர்ச்சையை எற்படுத்திய நிலையில் பிற்பகல் 2.30 மன்னிக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என கமலுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பல கன்னடக் குழுக்களும் மொழி ஆர்வலர்களும், கமல்ஹாசன் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். கன்னட ஆதரவு குழுக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) மாநிலத்தில் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. தனது கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
எனினும் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் கூறிவிட்டார். இந்த நிலையில் , கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி நாக பிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கமல் பேசியிருந்தார். எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியில் இருந்து பிறந்தது இல்லை. கன்னடம் குறித்து பேச கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா..? அல்லது மொழி ஆய்வாளரா..? மொழியை சிறுமைபடுத்திவிட்டு வணிக நோக்கத்திற்காக கமல்ஹாசன் நீதிமன்றம் வந்துள்ளார்.
மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும். கமலால் ஏற்பட்ட பிரச்சனை தான் இது. கர்நாடகாவில் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்பது மட்டும் தான் ஒரே வழி என நீதிபதி நாக பிரச்சன்னா முன்வைத்தார். மேலும் மன்னிப்பு கேட்க கமலுக்கு பிற்பகம் 2.30 மணி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், கமல் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் எங்களின் பதிலை பார்ப்பீர்கள் எனவும் நீதிபதி தெரிவித்தார்.