குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ஊட்டி மலை ரயில் தடம்புரண்டது. இதனையடுத்து அந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
மலை ரயில் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிகவும் பிரபலமான சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. அங்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம்புரண்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பலர் ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் ஊட்டி மலை ரயில் தடம் புரண்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது குடும்பத்தினருடன் உதகையில் இருந்து இதே மலை ரயில் மூலம் குன்னூர் சென்றது குறிப்பிடத்தக்கது.