மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “இது எங்கள் குடும்ப விஷயம் போன்றது; பேச்சுவார்த்தை விவரங்களை இப்போது பொதுவெளியில் பகிர முடியாது. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசுகையில், “தமிழக அரசியலில் ஓபிஎஸ் எவ்வளவு தேவையற்றவராக மாறிவிட்டார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா யாரை நம்பி முதலமைச்சர் பதவியை வழங்கினாரோ, அதே நபர் இன்று அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு முதுகில் குத்திவிட்டார். சுயமரியாதை உள்ள தமிழக மக்கள் இதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று சாடினார்.
இதற்கிடையே, திமுகவில் இணைந்த பிறகு இரண்டாவது நாளாக நேற்றும் அண்ணா அறிவாலயம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இனி அடிக்கடி அறிவாலயம் வந்து கொண்டே இருப்பேன்; தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. எனது வருகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


