நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேலத்தில் ரூ.1649 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக காவிரி உள்ளது. குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும். சன்னரக நெல்லுக்கு ரூ.2,548 வழங்கப்படும். தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.131 அதிகரிக்கப்பட்டு, ரூ.2500 வழங்கப்படும். கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.. சேலம் மாவட்டத்திற்கு 4 ஆண்டுகளில் ரூ.76,000 கோடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். சேலம் மாநகராட்சியில் 100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.. செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடியில் மேம்படுத்தப்படும்.
இழுப்பநத்தம் வேளாண் விற்பனை நிலையம் தரம் உயர்த்தப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேட்டூர், நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டிடங்கள் கட்டப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 3000 கோயில்களுக்கும், சேலத்தில் 56 கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.