தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே ‘சின்னம்மை’ (Chickenpox) பாதிப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. பரவி வரும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்தத் தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால், பெற்றோர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, நோயின் தீவிரம் குறையும் வரை அவர்களை வீட்டிலேயே வைத்துப் பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. குழந்தைகளின் உடலில் தோன்றும் அம்மை கொப்புளங்கள் முழுமையாக காய்ந்து, அவை தானாக உதிரும் வரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைப்பது அவசியம். இதன் மூலம் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் மற்ற குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வைரஸ் காற்று மூலமாகவும், நேரடி தொடர்பு மூலமாகவும் வேகமாக பரவக்கூடியது என்பதால், இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு முறையாக மூடிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடையும் வரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



