சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ராமகிருஷ்ணன் என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக சடங்குகளை செய்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய், இந்த ஜோதிடரை அணுகியுள்ளார். மகள்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என நம்ப செய்த ராமகிருஷ்ணன், அந்தப் பெண்ணையும் அவரது மகள்களையும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பூஜை நடைபெறும் நாளில், தந்திரமாக அந்தப் பெண்ணை ஒரு அறையில் அமர வைத்து விளக்கை அணையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, இரண்டு சிறுமிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எவ்வித அச்சமும் இன்றி அந்தப் பிஞ்சுகளுக்கு பாலியல் ரீதியாக கடும் கொடுமைகளை இழைத்துள்ளார். இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, அந்தச் சிறுமிகளுக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் கொண்டு சென்றபோதுதான், ஜோதிடர் செய்த அந்தப் பயங்கரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த ராமகிருஷ்ணனுக்குத் தலா 100 ஆண்டுகள் வீதம், மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
தண்டனையோடு மட்டுமல்லாமல், குற்றவாளிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதே போன்ற மற்றொரு பாலியல் புகாரும் ராமகிருஷ்ணன் மீது நிலுவையில் உள்ள நிலையில், அதற்கான தீர்ப்பு இன்று (பிப்ரவரி 24) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



