பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம் ஒளிபரப்பிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவார் மாவட்டத்தில் பகத்ராபாத் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பதஞ்சலி சுகாதார ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையம் ஆன்லைன் வழியே, தேவைப்படுவோருக்கு யோகா பயிற்சிகள், வகுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காக ஜூம் செயலி வழியே ஆன்லைன் கூட்டம் ஒன்று நடந்து வந்துள்ளது. இக்கூட்டத்தில் பதஞ்சலி யோகபீட அமைப்பில் உள்ளவர்களும், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட புனே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென ஆபாச படம் ஒன்றை, கூட்டத்தின் நடுவே ஒளிபரப்பி விட்டுள்ளார். இதனால், யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பகத்ராபாத் காவல் நிலையத்தில், பதஞ்சலி அமைப்பை சேர்ந்த கமல் பதோரியா மற்றும் சிவம் வாலியா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஆகாஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் புனே நகரின் எரவாடா பகுதியில் பி.காம் கல்லூரி வளாகம் அருகே வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.