நிலம் அல்லது வீடு வாங்கும் ஒவ்வொருக்கும் பட்டா, சிட்டா என்பது அவசியமாகிறது. ஆனால், இவற்றின் உண்மையான அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பலருக்கு இன்னும் தெரிவதில்லை. இந்த ஆவணங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், சொத்து விவகாரங்களில் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. எனவே, ஒரு சொத்தின் உரிமையாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பட்டா, சிட்டா குறித்த தகவல்களை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
பட்டா என்றால் என்ன..?
பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் (நிலம் அல்லது வீடு) உண்மையான உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்த வருவாய்த் துறை வழங்கும் மிக முக்கியமான சட்டப்பூர்வ ஆவணமாகும். பட்டாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தனிப் பட்டா மற்றும் கூட்டுப் பட்டா ஆகும்.
தனிப் பட்டா என்றால் என்ன..?
ஒரு நிலத்தை ஒருவரிடமிருந்து நீங்கள் முழுமையாக வாங்கும் போது, அந்த நிலத்தின் ‘சர்வே எண்’ (Survey Number) உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும். இதுவே தனிப் பட்டா ஆகும்.
கூட்டுப் பட்டா என்றால் என்ன..?
ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும் பட்சத்தில் இது வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நிலத்திற்கு 5 பேர் உரிமையாளர்களாக இருந்தால், அவர்கள் 5 பேரின் பெயர்களும் ஒரே பட்டாவில் இடம் பெறும்.
பட்டா எப்போது கிடைக்கும்..?
நீங்கள் ஒரு நிலத்தை வாங்கிய 15 நாட்களுக்குள் பட்டா உங்களுக்கு வழங்கப்படும். ஆனால், ஒரு பெரிய நிலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் நீங்கள் வாங்கினால், அரசு ஊழியர்கள் நேரில் வந்து நிலத்தை அளவீடு செய்து, சர்வே எண்ணின் உட்பிரிவை வகுத்த பின்னரே பட்டா வழங்குவார்கள்.
சிட்டா என்றால் என்ன..?
பட்டா என்பது உரிமையாளரை குறிக்கும் ஆவணம் என்றால், சிட்டா என்பது அந்த நிலத்தின் தன்மையைப் பற்றிய கூடுதல் விவரங்களை உள்ளடக்கிய தொகுப்பாகும். சிட்டாவில் பொதுவாக, நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம், பட்டாவின் வகை மற்றும் உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இருக்கும். அதாவது, பட்டா என்பது உரிமையை நிலைநாட்டும் ஆவணம் என்றால், சிட்டா என்பது நிலத்தின் தன்மையை விளக்கும் ஆவணம் ஆகும்.
வீட்டிலிருந்தே சரிபார்ப்பது எப்படி..?
உங்கள் நிலம் தொடர்பான பட்டா மற்றும் சிட்டா விவரங்களை தமிழ்நாடு அரசின் http://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாகவே வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.



