சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.400 லிருந்து ரூ.1100 ஆக உயர்த்தி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் அதிகரித்த ஓய்வூதியம் கிடைக்கும், பின்னர் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதிஷ் குமார், “சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், விதவை பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்போது ஒவ்வொரு மாதமும் ரூ.400 க்கு பதிலாக ரூ.1100 ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்..
ஓய்வூதிய அதிகரிப்பு 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் “முதியவர்கள் சமூகத்தின் ஒரு விலைமதிப்பற்ற பகுதி, அவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது எங்கள் முன்னுரிமை. இந்த திசையில் மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்” என்று முதல்வர் கூறினார்.
243 சட்டமன்ற இடங்களைக் கொண்ட பீகாரில், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read More : பான் கார்டு மூலம் சில நிமிடங்களில் ரூ.5 லட்சம் கடன் பெறலாம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை?