தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு அரசு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ‘இ-கேஒய்சி’ (e-KYC) சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இன்று, அதாவது டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகை பதிவை மேற்கொண்டு இந்த சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கேஒய்சி அப்டேட் செய்யத் தவறும் பட்சத்தில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட கார்டுகளுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. போலி கார்டுகளை ஒழிப்பதற்கும், தகுதியற்றவர்கள் மானியங்களை பெறுவதை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஜனவரி மாதத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு வழங்க திட்டமிட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க உதவி ஆகியவற்றைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம். கேஒய்சி முடிக்கப்படாத கார்டுகள் செயலிழக்கச் செய்யப்படலாம் என்பதால், அத்தகைய பயனாளர்களுக்குப் பொங்கல் பரிசு கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தடையின்றி பொருட்களைப் பெற உடனடியாக அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகை பதிவைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



