நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய தொழில்நுட்ப வாழ்க்கையில் கணினி முன் பல மணி நேரம் செலவழிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர், தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றனர்.
ஆனால், இந்த உட்காரும் பழக்கம் மிக ஆபத்தானதென்றும், அது புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தற்போது தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடலின் இயக்கம் குறைவதால், பெருங்குடல், நுரையீரல், எண்டோமெட்ரியல் புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும், நீண்ட நேரம் சுழற்சி இல்லாமல் உட்கார்வது, உடல் பருமன், இருதயநோய், நீரிழிவு மற்றும் அகால மரணம் ஆகியவற்றையும் தூண்டுகிறது. இதற்கான தீர்வாக, மருத்துவர்கள் சில எளிய முன்னெச்சரிக்கை வழிகளை பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 5 நிமிடங்கள் எழுந்து நடக்க வேண்டும். தொலைபேசியில் பேசும் போதும், இடைவேளைகளிலும், உடலை இயக்கும் பழக்கம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சிகள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூட உட்காரும் நேரத்தை குறைத்தால், அகால மரண அபாயத்தை 20 சதவீதம் குறைக்கலாம். இது எளிய மாற்றம் என்றாலும், உயிர்காக்கும் தீர்வாக இருக்கலாம்.
Read more: உணவுக்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல்..!! – 34 பேர் பலி