பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் – SDPI, PFT” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.