இன்று காலை கொல்வெஸி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன் வேயில் இருந்து சறுக்கிய ஒரு பட்டய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் காங்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காங்கோ ஜனநாயக குடியரசின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா மற்றும் அவரது குழுவினர் அந்த விமானத்தில் இருந்தனர்..
விமானத்தின் பின்புறம் முழுவதும் சில விநாடிகளிலேயே தீ பரவத்தொடங்கியது.. எனினும் அனைத்து பயணிகளும் தீப்பரவுவதற்கு முன்பே உடனே வெளியேறி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், விமானத்தில் இருந்து கரும்புகை அடர்த்தியாக எழுவது மற்றும்
அதிகாரிகள் பதட்டத்துடன் ஓடிச் செல்லும் காட்சிகள் தெளிவாக காணப்படுகின்றன.
ஆன்லைனில் பகிரப்பட்ட வைரல் வீடியோக்களில், விமானம் ரன் வேயில் இருந்து சறுக்கிய சில நொடிகளிலேயே ஏற்பட்ட குழப்பமான நிலை தெளிவாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த சில பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறி ஓடிச் செல்வதையும், பாதுகாப்பிடம் தேடி துடிதுடிப்புடன் பாய்வதையும் அந்த காட்சிகள் காட்டுகின்றன.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன
கின்ஷாசா தலைநகரில் இருந்து லுவாலாபா மாகாணத்திற்குப் புறப்பட்டிருந்த அந்த சார்ட்டர்ட் எம்ப்ராயர் விமானம்,
உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில் ரன்வே 29–ல் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ விமானம் தரையைத் தொடங்கியவுடன் அதன் அடிப்பகுதியில் சறுக்கி, ஓரிடத்தில் நின்றதுடன்,
வால் பகுதியில் உடனடியாக தீப்பிடித்தது. உள்ளே இருந்த பயணிகள், அதில் மூத்த அரசுத் அதிகாரிகளும் அடங்குவர்.. புகை நிறைந்த கேபினிலிருந்து தப்பிக்க போராடி வெளியேற முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கன்சோவின் சுரங்கத்துறை அமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகரான ஐசக் நெய்ம்போ பேசிய போது “ விமானத்தில் சுமார் 20 அரசு அதிகாரிகள் பயணித்திருந்தனர், மேலும் தீ அதிகரிக்கும் முன்பு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், விமானத்தின் சுமை பகுதியிலிருந்த தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் அழிந்துவிட்டது..” என்று கூறினார்.
அவசர உதவி சேவைகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின. இருப்பினும், விமானத்தின் பின்புறம் மிகுந்த கட்டமைப்பு சேதத்தை சந்தித்தது.
விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை இந்த தவறான தரையிறக்கத்திற்கு இயந்திர கோளாறா, விமானி பிழையா, ரன்வே நிலைமையா, அல்லது வானிலையா என்ற விவரத்தைத் தெளிவுபடுத்தவில்லை.
காங்கோவில் 2 நாட்களுக்கு முன்பு காளோண்டோ பகுதியில் ஏற்பட்ட தாதுப் பணி விபத்தில் 32 பேர் பலியான பின்னர் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த விபத்துச் சம்பவத்தை ஆய்வு செய்யவும், அப்பகுதி அதிகாரிகளைச் சந்திக்கவும் அமைச்சரின் குழு பயணித்துக் கொண்டிருந்தது. இதனால், இந்த விமானச் சம்பவம் தேசிய பாதுகாப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை அதிகாரிகளுக்கு கூடுதல் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது..



