அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க வைக்கும் இந்த பயங்கர காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புதிய வீடியோவில், பீதியடைந்த மாணவர்கள் தப்பிக்க போராடும்போது விடுதி கட்டிடத்திற்கு அருகில் அடர்த்தியான கரும்புகைகள் எழுவதைக் காணலாம். சிலர் ஜன்னல்கள் வழியாக ஒருவருக்கொருவர் ஏற உதவுவதும், தற்காலிக கயிறுகளைப் பயன்படுத்தி உயர்ந்த தளங்களில் இருந்து இறங்குவதையும் பார்க்க முடிகிறது.. பலர் அருகிலுள்ள மரங்களில் இறங்கி குதிக்கின்றனர். இந்த வீடியோவின், பின்னணியில் ஏர் இந்தியா ஜெட் விமானம் எரிவதை உதவியற்ற முறையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
இந்தியாவின் மிக மோசமான விமானப் போக்குவரத்து துயரங்களில் ஒன்றாக அகமதாபாத் விமான விபத்து மாறி உள்ளது. கடந்த 12-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர், தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இதில் விடுதியில் வசித்து வந்த 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் அடங்குவர். இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது. விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More : என்ன தான் நடக்குது? அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து..