பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில், அண்மையில் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், செயல் தலைவராக அன்புமணி தொடர்வார் என்றும் அறிவித்தார்.
ஆனால், பாமகவின் சட்ட விதிகள்படி நான் தான் தலைவர் என அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ராமதாஸ் – அன்புமணியின் மோதலால் பாமகவுக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத வகையில் பாமகவில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாமகவினர் மன உளைச்சலில் உள்ளோம். இப்போது எது சொன்னாலும் தப்பாக போய்விடும்” என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார். அதே போல சேலம் தெற்கு தொகுதி பாமக MLA அருள் தனது கோரிக்கை மற்றும் முடிவை தெரிவிக்க ராமதாஸின் இல்லத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பா.ம.க. தொண்டர்கள் உச்சகட்ட மன உளைச்சல் மற்றும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், அரசியலே வேண்டாம் என்ற அளவிற்கு மன வேதனையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த நெருக்கடி மற்றும் மோசமான நிலையை நாங்கள் நிச்சயம் கடந்து வருவோம்” என்று கூறியுள்ளார்.
Read More : பற்றி எரியும் சல்மான் கான் சம்பள விவகாரம்..!! பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு இத்தனை கோடியா..?