பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்..
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..
ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இதனிடையே சமீபத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இதை தொடர்ந்து ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திக்கு ராமதாஸ் அருகே இருக்கைகள் போடப்பட்டது.. மேலும் இந்த பொதுக்குழுவில் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீ காந்தி என்றே அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்..
பின்னர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.. அதன்படி ராமதாஸ் தரப்பின் நிர்வாகிகள் குழுவில் தற்போது ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.. அன்புமணிக்கு மாற்றாக பாமகவில் ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது..
அந்த வகையில் தற்போது ராமதாஸ் முக்கிய முடிவை அறிவித்துள்ளார்.. பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.. தருமபுரியில் நடைபெற்ற பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. தனக்கும் கட்சிக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. மேலும் “ பாமக என்பது நான் போட்ட விதை, இதற்கும் அன்புமணிக்கும் என்ன சம்மந்தம்.. 47 ஆண்டுகளாக இரவு, பகல், பள்ளம், மேடு பார்க்காமல் கட்சியை வளர்த்தவன் நான்.. 2026 தேர்தலில் நான் கூட்டணி அமைப்பேன்.. பாமக வளர வேண்டும் என்று ஓய்வில்லாமல் வளர்த்த ஜி.கே. மணியை ஓரம் தள்ளிவிட முடியுமா?” எனவும் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்..
இந்த பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, பேரன் சுகந்தன் பரசுராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், மகளுக்கு அந்த பொறுப்பை வழங்கி உள்ளார் ராமதாஸ்..



