தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாடு இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.. ஆனால் மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. காலை 10 மணி அளவிலேயே சுமார் 25% இருக்கைகள் நிரம்பி உள்ளன..
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் என 3 தொண்டர்கள் மயக்கம் அடைந்தனர்.. 3 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.. மதுரையை பொறுத்தவரை நேற்றைய தினமே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், இன்று காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.. எனினும் தொண்டர்கள் இருக்கும் இடத்திலேயே முதலுதவி அளிக்கும் வகையில் ட்ரோன்கள் வைக்கப்பட்டுள்ளது..
அதே போல் தவெக மாநாட்டுத் திடலில் குடிநீர் தீர்ந்துவிட்டதாக புகார் எழுந்தது.. தொண்டர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டது. குடிநீர் குழாய்களில் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் குடிநீர் வரவில்லை என்று தொண்டர்கள் கூறுகின்றனர்… தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டிலும் குடிநீர் பிரச்சனை சர்ச்சையானது.. மாலை நேரத்தில் மாநாடு தொடங்குவதால், மதியத்திற்கு பிறகே குழாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.. தற்போது மதுரை மாநாட்டிலும் குடிநீர் மற்றும் வெயில் பிரச்சனை சவாலாக மாறி உள்ளது..
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தொண்டர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகின்றனர்.. இந்த நிலையில் மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே ஒரு வழிபாதையில் தவெகவினர் பேருந்து வந்தது.. அந்த பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. வாக்குவாதம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. மேலும் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி தவெக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.. இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
இதனிடையே சுங்கக்கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பாரப்பத்தி சுங்கச்சாவடிக்கு முன்பே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. சுங்கச்சாவடியை கடந்து சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக முன்னரே வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.. இதனால் சாலை ஓரங்களில் நீண்ட வரிசையில் சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. எனினும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..