கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கீழ் வாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதுடைய லதா குமாரி. இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலர் ஒருவரின் குடும்பம் வசித்து வந்தது. அக்காவலரின் மனைவி சுமையா (46) என்பவர், பக்கத்து வீட்டுப் பழக்கம் என்ற முறையில் லதா குமாரியுடன் நட்புரீதியில் பழகி வந்துள்ளார்.
இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுமையா, லதா குமாரியிடம் அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் இல்லையென்றதும், அவருடைய நகைகளைக் கூட அடகு வைத்துத் தருமாறு மிரட்டும் தொனியில் கேட்டதாகத் தெரிகிறது. சுமையாவின் இந்த போக்கு லதா குமாரிக்குப் பிடிக்கவில்லை. இதனால், இனி இதுபோன்று பணம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது சுமையாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, ஆத்திரத்தில் இருந்த சுமையா, லதா குமாரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். உள்ளே சென்ற அவர், மூதாட்டியை கட்டிப் போட்டதோடு, சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வாயில் துணியைத் திணித்து அடைத்துள்ளார். அதோடு நிற்காமல், லதா குமாரி அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டுள்ளார். நகையை திருடிச் சென்றால், அது குறித்து போலீசுக்குத் தெரிந்துவிடும் என்று எண்ணிய சுமையா, லதா குமாரியை உயிரோடு எரித்துக் கொன்றால் கொள்ளையடித்த விஷயம் வெளியே தெரியாது என்ற கொடூரமான முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படியே, மூதாட்டிக்குத் தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனினும், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய லதா குமாரியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, மேல் சிகிச்சைக்காகக் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா குமாரி, பத்தனம்திட்டா காவல்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், சுமையாதான் தனக்குத் தீ வைத்துக் கொளுத்தியதை விரிவாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுமையாவை கைது செய்தனர். சுமையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை சமாளிக்கவே, லதா குமாரியின் நகைக்கு ஆசைப்பட்டு, அவரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த லதா குமாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் இந்த வழக்கை கொள்ளை மற்றும் கொலை வழக்காக மாற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இன்னைக்கு இந்த பொருட்களை மட்டும் பரிசா கொடுத்துறாதீங்க..!! உங்களுக்கு தான் பிரச்சனை வரும்..!!



