முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க அமைச்சர்களுக்குள் போட்டி நடந்து வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் மிகவும் யதார்த்தமாக பல்வேறு விவகாரங்களை பகிர்ந்துக் கொண்டார். என்ன தான் தாம் ஒரு அமைச்சராக இருந்தாலும் சக அமைச்சர்கள் இருவரை பற்றி புகழ்ந்து பேசியதுடன் அவர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் இருப்பதாக பாராட்டு மழை பொழிந்தார். அமைச்சர் கே.என்.நேருவிடம் பாராட்டு பெற்ற 2 அமைச்சர்கள் வேறு யாருமில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தான். சுகாதாரத்துறைக்கு ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், என இதற்கு முன் பலர் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் ஆனால், அவர்கள் எல்லாம் சந்திக்காத சோதனைகளையும், நெருக்கடிகளையும் இன்று தனது துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து வருவதாக நேரு தெரிவித்தார்.

கொரோனா, காய்ச்சல் என பல சவாலான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எளிதாக செய்து வருவதாகவும், வெளியூர்கள் சென்றால் கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்பதற்காக மலை ஏறிவிடுகிறார் என்றும் பாராட்டினார். இவருக்கு சற்றும் குறையாத வகையில், அமைச்சர் சேகர்பாபுவையும் அமைச்சர் நேரு பாராட்டினார். அமைச்சர் சேகர்பாபு தினமும் ஒரு கோவிலுக்கு செல்லக்கூடியவர் என்றும் தாம் கூட எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுமாறு பல முறை அவரிடம் தெரிவித்திருக்கிறேன் என்றும் பேசினார்.

இந்துசமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே, சேகர்பாபுவை போல் ஒரு சிறப்பான அமைச்சர் இருந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்று முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அமைச்சர்களுக்குள் மிகப்பெரிய போட்டியே நடந்துகொண்டு இருப்பதாக மிகவும் யதார்த்தமாக பேசினார் அமைச்சர் கே.என். நேரு.