fbpx

முருகன் உள்ளிட்ட 4 பேரையும் முகாமிலிருந்து விடுவிக்க சீமான் கோரிக்கை!!

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களது விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள்.

இளமைப் பருவத்தில் சிறைப்படுத்தப்பட்டு, வெளியுலகத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு,  தங்களது குடும்பத்தினரையும், உறவுகளையும் பிரிந்து, சிறைக்கொட்டடியிலேயே  வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த அவர்களுக்கு எஞ்சியிருக்கும்  காலமாவது  முழுமையான விடுதலையின் மகிழ்வைத் தர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆறுபேரும் விடுதலை பெற்றுவிட்டார்கள் எனும் மகிழ்ச்சிகளுமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்குள்ளாகவே, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தந்தது. அம்முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களே தங்களை விடுவிக்கக்கோரி, தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், இவர்கள் நால்வரையும் அங்கு அடைப்பதென்பது சிறிதும் ஏற்புடையதல்ல.

வெளியுலகத்திற்கும், சட்டத்தின் பார்வையில் அவர்கள் நால்வரும் விடுதலையற்றதாக கொண்டாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றுமொரு கொடுஞ்சிறையாகவே இருக்கும்.

ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவது எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்? புழல் சிறையில்கூட நடைப்பயிற்சி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்குக்கூட வாய்ப்பில்லாத சிறப்பு முகாம்கள் என்பது தனிமைச் சிறையைவிடக் கொடுமையான நெருக்கடிகள் நிறைந்த சித்ரவதை முகாம்களே. அதற்கு மாற்றாக, அவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பும் முடிவும் மிகத்தவறானது; கொலைக்களத்திற்கே அனுப்புவதற்குச் சமமான ஆபத்தும்கூட.

எனவே, நால்வரும் ஈழத்தமிழர்கள் என்பதாலேயே, அவர்களைச் சிறப்பு முகாமில் அடைப்பதும், இலங்கைக்கு நாடுகடத்த முயல்வதும் உகந்த நடவடிக்கையில்லை. மேலும், தங்களைச் சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கக்கோரி தம்பி இராபர்ட் பயாஸ் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

அவர்களின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பும், கடமையுமாகும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு அளித்த நீண்ட சிறை விடுப்பில் அக்கா நளினி, அண்ணன் ஜெயக்குமார், தம்பி ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த நாட்களில் சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிக அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரியச் சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

மருத்துவர்கள் மீது நடவடிக்கை துறைரீதியாக மட்டுமே இருக்குமா?… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்...!!

Mon Nov 21 , 2022
சென்னையில் அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் ஐ பாதிப்பு தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்றது. சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது அவர் […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையா..?? அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல்..!!

You May Like