90 களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகப் பிரபலமாக அறியப்பட்ட சக்திமான் நாடகம் வெள்ளித்திரையில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
90களில் பிறந்த குழந்தைகளுக்கு சக்திமான் நாடகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பொதிகை தொலைக்காட்சியில் வெளியான இந்த தொடர் நாடகம் குழந்தைகளின் மனதை கொள்ளை கொண்டது. வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு வாரம் முழுக்க பள்ளிச் சிறுவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் காத்திருப்பர். சக்திமான் தொடரில் முகேஷ் கண்ணா கங்காதர் என்னும் கதாபாத்திரத்தில் மூக்கு கண்ணாடி அணிந்து அப்பாவியாகவும், சக்திமான் கேரக்டரில் அசாத்தியமான வீரனாகவும் நடித்து அசத்தியிருப்பார். சக்திமான் நாடகம் பார்க்கும் சிறுவர்கள் அவரை போன்ற நடித்துக் காட்டுவதும், தனக்கும் சக்தி இருப்பதாக எண்ணி சக்திமான் போலவே சுற்றுவதும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான நினைவுகளாகும்.
சக்திமான் நாடகத்தால் கவரப்பட்ட சிறுவர்கள் மொட்டை மாடியில் நின்று கொண்டு சக்திமான் சுற்றுவது போல் சுற்றி கிழே விழுந்து கை கால்களை உடைத்துக் கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. திருவிழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களில் சக்திமான் உடையை வாங்கிக் கேட்டு அடம் பிடிக்காத சிறுவர்களே இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு சக்திமான் கதாபாத்திரம் சிறுவர்கள் மனதில் ஆழமாக வேறூன்றியது. இந்த நிலையில் சக்திமான் நாடகம் வெள்ளித் திரையில் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சக்திமானாக நடித்த முகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “ சக்திமான் படம் சர்வதேச தரத்தில் உருவாக உள்ளது. கிட்டத்தட்ட 200 முதல் 300 கோடி பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. சோனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது” என தெரிவித்தார். மேலும் கோவிட் காரணமாக படம் எடுக்க தாமதமானதகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நடிகர்களின் பட்டியலும் வெளியாகும் என முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.