திருச்சி பஞ்சப்பூரில் ரூ.5,655 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள் ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு வினிநோக வலையமைப்பிற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.1,490 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தி திறனை வலுப்படுத்தும்
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள கிராமப்புற சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தேசிய நெடுஞ்சாலை எண். 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோயில்-சார்லபள்ளி, போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், ராமேஸ்வரம் – மங்களூரு செண்ட்ரல், திருநெல்வேலி – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார்.. மேலும் “ இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.. சுமார் 9 லட்சம் பேருக்கு பைப் மூலம் எரிவாயு இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள சுமார் 9 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.
4 கோடி மரங்களை நடுவதற்கு இணையானதாக இயற்கை எரிவாயு இணைப்பு திட்டம் இருக்கும்.. ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்கள் சாலைகள், ரயில் பயணம், வேலைவாய்ப்பு, குழாய் மூலம் எரிவாயு கிடைக்கும். மணிலியில் தொடங்கப்பட்டுள்ள லூப்ரிகண்ட் ஆலை உலகின் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்று என்பது பெருமை. 370 கி.மீ நீளமுள்ள கிராமப்புற சாலைகளை இன்று அர்ப்பணித்து வைத்திருக்கிறேன்.. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம்.. தொடர்ந்து பாடுவோம்..” என்று தெரிவித்தார்..



