பீகாரில் சிறை அதிகாரிகளுக்கு பயந்து கைதி ஒருவர் விழுங்கிய செல்போனை எந்தவித அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில், தடை செய்யப்பட்ட நிலையிலும் பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகள் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனடிப்படையில் அடிக்கடி சிறையில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை சோதனை செய்தபோது, அதிகாரிகளுக்கு பயந்து குவாஷிகர் அலி என்ற கைதி தான் மறைத்துவைத்திருந்த செல்போனை விழுங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, கைதிக்கு திடீரென கடும் வலிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு சிறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டதையடுத்து, அங்கு அவருக்கு வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் செல்போன் இருப்பது தெரிய வந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதியின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபிக் உதவியுடன் எவ்வித அறுவை சிகிச்சையின்றி செல்போனை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர். மேலும், எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இந்த அளவிலான பொருள் மீட்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறினர்.