தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன.
தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளதை தொடர்ந்து, பிற தனியார் நிறுவனங்களும் விலையேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, ஒரு லிட்டர் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் 78 ரூபாயாகவும், டீ ஸ்பெஷல் பால் 70 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், நிலைப்படுத்தப்பட்ட பால் 68 ரூபாய்க்கும், சமன்படுத்தப்பட்ட பால் 62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தயிர் விலையும் கிலோவிற்கு 2 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பால் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தட்டுப்பாடு இன்னும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 14 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால், கறவை மாடு வளர்ப்போர் ஆவினுக்குப் பால் வழங்குவதை குறைத்துத் தனியாரை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பொது விநியோக முறையில் இயங்கும் ஆவின் பால் விநியோகத்தையும் பாதிக்கக்கூடும் என தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது கவலையை தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் பால்வளத்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பால் உற்பத்தி குறைபாட்டை சரிசெய்யவும், தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Read More : சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை..!! மார்ச் 1இல் அதிரடி மாற்றம்..!! முக்கிய அப்டேட்ஸ் இதோ..!!



