போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த 76 மருந்து நிறுவனங்களில், 26 நிறுவனங்களுக்கு அவை தயாரிக்கும் மருந்துகளின் தரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மேலும், 3 நிறுவனங்களின் தயாரிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது..
இந்த அதிரடி ஆய்வுக்குப் பிறகு, 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உடனடியாக அந்த மருந்து நிறுவனங்களை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து செயல்படுகின்றன. கலப்பட மற்றும் தரமற்ற மருந்துகளின் உற்பத்தியை நிறுத்தவும், மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..
இந்த நடவடிக்கை முதல் கட்டம் தான் என்றும், போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல், சளி மருந்துகளை உட்கொண்ட பிறகு குழந்தைகள் இறந்ததாக உஸ்பெஸ்கிஸ்தான் அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..