தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், நிலுவை சொத்து வரி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புதாரர்கள் தங்களின் சொத்து வரி என்னுடன் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள் தங்களின் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் எண் மற்றும் ஜிஎஸ்டி எண் குறித்த விவரங்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பு தாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நேரில் அணுகி ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து இணைத்துக் கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.