அமெரிக்காவின் சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அதிரடியான புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள், சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளதுடன் இந்திய மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மேலிருந்து கீழான பிரமிடு’ (Inverted Pyramid) அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறையில், புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு தானியங்களின் அளவைக் குறைத்து, உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் தலா 1.6 கிராம் என்ற விகிதத்தில் தினசரி புரதத்தை உட்கொள்ள வேண்டும் என அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் ஜான் எஃப் கென்னடி ஜூனியர் பரிந்துரைத்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் இந்த உணவுப் புரட்சி இந்தியாவுக்குப் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மூத்த மருத்துவர் கு.கணேசன் இது குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தற்போதைய இந்திய உணவுமுறை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான மாவுச்சத்து கொண்டதாக மாறிவிட்டது. உண்மையில், சுமார் 73 சதவீத இந்தியர்களின் உணவில் புரதச்சத்து மிகக் குறைவாக இருப்பதாகவும், 10-ல் 9 இந்தியர்களுக்குத் தங்களின் தினசரி புரதத் தேவை என்ன என்பதே தெரிவதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். பலரும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளையே புரதத்தின் ஆதாரமாக தவறாக கருதும் நிலையும் இங்கே நீடிக்கிறது.
இந்தச் சூழலில், அமெரிக்கா முன்மொழிந்துள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுமுறை இந்தியாவிற்கும் மிகவும் அவசியமானது என்று மருத்துவர் கணேசன் வலியுறுத்துகிறார். குறிப்பாக, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை, பால் பொருட்கள், சிறுதானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உள்ளடக்கிய இந்த முறை இந்தியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். நமது பாரம்பரிய உணவு முறையிலேயே இத்தகைய சத்துக்கள் நிறைந்திருந்தாலும், நவீன கால மாற்றத்தால் நாம் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.



