இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் உள்ள டேம் சாலை அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை 8.30 மணி அளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இச்சம்பவத்தை இனவெறி மிக்க’ தாக்குதலாகக் கருதி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் இனவெறி கருத்துக்களை தெரிவித்ததாக அந்தப் பெண் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர், மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Birminghamlive வெளியிட்ட தகவலின்படி, சந்தேக நபர்கள் “வெள்ளை நிற ஆண்கள்” என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தலையில் முடி இல்லாமல் (shaven head), கருமையான நிறத்தில் ஸ்வெட்ஷர்ட் அணிந்திருந்தார்; மற்றொருவர் சாம்பல் நிற டாப் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் சிக் சமுதாயத்தை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மற்றும் இதனை குறிக்கோள் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்படுகின்றது. உள்ளூர் மூத்த போலீசார், இந்த கோபம் “முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது” என்றும், அந்த பகுதியில் கண்காணிப்புப் பணிகளை அதிகரிப்பதாகவும் உறுதி செய்தார்.
இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர் கூறுகையில், சமீப காலமாக “இனவெறி” அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது ஒரு தீவிர வன்முறைச் செயல் என கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு வால்வர்ஹாம்டனில் உள்ள ஒரு ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று வாலிபர்களால் வயதான இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இனவெறி சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025!. இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா தங்கம் வென்று வரலாறு!