மகள் காதல் திருமணம் செய்ததால், அவரை கடத்தி மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாதவ். இவர் பக்கத்து ஊரில் வசித்து வரும் அட்சிதாவை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் திருமணத்துக்கு பிறகு இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். இதில், அச்சிதாவின் பெற்றோர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். ஊரார் பேச்சால் இந்த வருத்தம் ஆத்திரமாக மாறியது. இதனால், மகள் அட்சிதாவை பழிவாங்க திட்டமிட்டனர். உறவினர்களுடன் காரில் அட்சிதாவின் வீட்டுக்குச் சென்ற பெற்றோர், அவரை மிரட்டியுள்ளனர்.

பிறகு அட்சிதாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை கடத்தினர். வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரை அலங்கோலப்படுத்தவும் முடிவு செய்தனர். வீட்டிலேயே அவரை உட்கார வைத்து மொட்டை அடித்தனர். பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டனர். இச்சம்பவம் குறித்து அச்சிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இளம்பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.