மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக சார்பில் இன்பத்துரை, தனபால் ஆகியோரும் 6ஆம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை காலை முதல் நடைபெற்ற வருகிறது. 13 பேர் 17 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. அதே போல் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக சார்பில் போட்டியிடும் தனபால், இன்பதுரை ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
வரும் 12-ம் தேதி வரை, மனுக்களை திரும்ப பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். வேட்பு மனு உடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த வகையில், முன் மொழிவு கடிதம் இருக்காது என்பதால் சுயேச்சைகளின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.
போட்டி இல்லாத பட்சத்தில் ஜூன் 12-ம் தேதி பிற்பகல், பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிடும் 6 பேரும் தேர்வானதாக அறிவிக்கப்படுவார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியான சுப்ரமணியம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அன்றைய தினம் போட்டியின்றி தேர்வானதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
Read More : நீட் மறு தேர்வு கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..